ரூ.5 கோடி 'ஹெராயின்'.. 10 ரூபாய் சோப்புக்குள் மறைத்து கடத்திய இளைஞர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
கரீம்கஞ்ச்: ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை 10 ரூபாய் சோப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்திய இளைஞர் அசாம் போலீஸார் கைது செய்தனர்.
இத்தனை கோடி மதிப்பிலான போதைப்பொருள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்குவதால், இந்த விவகாரத்திலும் சீனாவின் கை இருக்குமா என்ற ரீதியில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,51,718 கோடி; தமிழகத்தின் வரி வருவாய் எவ்வளவு?
போதைப்பொருள் 'நெட்வொர்க்'
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியாணா, அசாம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. மேற்கூறிய மாநிலங்கள் அனைத்தும் பாகிஸ்தான், சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தல் ஒரு நெட்வார்க்கை போல செயல்படுகிறது.
நூதனமான முறைகளில் கடத்தல்
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் சமீபகாலமாக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. எனினும், அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விதவிதமான முறைகளில் போதைப்பொருட்கள் நாட்டு்ககுள் கொண்டு வரப்படுகின்றன. போதைப்பொருட்களை பொட்டலங்களாக கட்டி அவற்றை விழுங்கி விடுவது; எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கொண்டு வருவது போன்ற தில்லாலங்கடி வேலைகளில் கடத்தல்காரர்கள் ஈடுபடுகின்றனர்.
அசாமில் தீவிர சோதனை
அந்த வகையில், அசாமின் அஷிம்கஞ்ச் பகுதியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்திக் கொண்ட செல்லப்படுவதாக நேற்று இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மறித்து போலீஸார் அதில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், காரை ஓட்டி வந்தவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே காரை மறுபடியும் சோதனை செய்தனர்.
சோப்புக்குள் மறைத்து...
அப்போது ஒரு கவரில் 30-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான சோப்புகள் இருந்துள்ளன. சந்தேகத்தின் பேரில் அதில் இருந்த ஒரு சோப்பை போலீஸார் பிளந்து பார்த்த போது, அதற்குள் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அனைத்து சோப்புகளிலும் இருந்து ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில் 675 கிராம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, காரில் வந்தவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.