டெல்லியில் திருடன் என தவறுதலாக நினைத்து மாணவனை நையப்புடைத்த அக்கம்பக்கத்தினர்
டெல்லி: டெல்லியில் 21 வயது மாணவரை திருடன் எனது நினைத்து அக்கம்பக்கத்தினர் தர்ம அடி அடித்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்தவர் அர்பாஸ் அகமது(21). அவர் தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு அர்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். தூக்க கலக்கத்தில் அவர் வேறு ஒரு வீட்டுக் கதவை தனது சாவியால் திறக்க முயன்றார்.
யாரோ திருடன் தான் கதவை திறக்க முயற்சி செய்வதாக சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் நினைத்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அர்பாஸை பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் திருடனை பிடித்து வைத்துள்ளதாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அர்பாஸை விசாரித்தனர். விசாரணையில் அர்பாஸ் அதே தளத்தில் வேறு ஒரு வீட்டில் வசிப்பது தெரிய வந்தது. தவறுதலாக அவர் வேறு வீட்டுக் கதவை திறக்க முயன்றதை போலீசார் தெரிந்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை போலீசார் ஆய்வு செய்தனர்.