பயங்கர பனிச்சரிவு.. உத்தரகாண்டில் மலையேற்ற வீரர்கள் 10 பேர் பலி.. 18 பேர் மாயம்
டேராடூன்: உத்தராகண்டில் உள்ள திரெளபதி தண்டா மலை சிகரத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனிச்சரிவில் சிக்கியவர்களில் 18 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரிய பனிச்சரிவு என்பதால் காணாமல் போனவர்களை தேடுவதில் சிரமம் நீடிப்பதாகவும், அதனால் ராணுவ வீரர்கள் அங்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படியே உருகிய இமயமலை.. கேதார்நாத் கோவில் அருகே பிரமாண்ட பனிச்சரிவு.. வெளியான திக்திக் வீடியோ!
ஆபத்து நிறைந்த பயணம்..
இமயமலைத் தொடர்களில் ஏராளமான சிகரங்கள் உள்ளன. இந்த சிகரங்களில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். இந்த மலையேற்றத்துக்காகவே பிரத்யேக பயிற்சி முகாம்களும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. மலை சிகரங்களில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் குறிக்கோள் ஆகும். அதே சமயத்தில், இந்த மலையேற்றத்தில் மிகுந்த சிரமங்களும், ஆபத்துகளும் இருக்கின்றன.
எமனாகும் பனிச்சரிவு..
ஒரு அடி தவறினாலும் மரணம் என்ற நிலையில்தான் அவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற மனிதத் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மலையேறும் போது பனிச்சரிவு ஏற்படுவது இயற்கை அரங்கேற்றும் ஆபத்து ஆகும். பல ஆயிரம் டன் கணக்கில் சரியும் பனியானது, அவர்களை அப்படியே மூடிவிட்டு சென்றுவிடும். இதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் ஆகும். ஆண்டுதோறும் பல மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
16 ஆயிரம் அடியில் பனிச்சரிவு
இந்நிலையில், உத்தர்காசி நகரில் இயங்கும் நேரு மலையேற்றக் கல்லூரியை சேர்ந்த 40 வீரர்கள் உத்தராகண்டில் உள்ள திரெளபதி தண்டா மலை சிகரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி ஏறத் தொடங்கினர். இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவர்கள் கிட்டத்தட்ட 16 ஆயிரம் அடியை எட்டியிருந்தனர். இந்த சூழலில், இன்று காலை 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 40 மலையேற்ற வீரர்களும் அடித்து செல்லப்பட்டனர்.
10 பேர் பலி
இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 மலையேற்ற வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 18 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியி்ல் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரிய அளவிலான பனிச்சரிவு என்பதால் காணாமல் போனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.