அமைதிப்படை பவானிசிங்... அதிரடிப்படை ஆச்சாரியா..!
பெங்களூரு: பவானிசிங் அமைதியே வடிவானவர் என்றும் 81வயதான பி.வி.ஆச்சாரியாவோ மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்றும் கூறுகிறார்கள் கர்நாடக ஹைகோர்ட் வட்டாரத்தில்.
2005 முதல் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வக்கீலாக ஆஜரானவர் ஆச்சாரியா. அவரது ராஜினாமாவை தொடர்ந்து, அதன்பிறகுதான், பவானிசிங் அரசு வக்கீலாக வாதிட வந்தார்.
ஆச்சாரியா எப்படி?
வழக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற தகுதியானவர்கள் என்று தெளிவாக இருந்தார் ஆச்சாரியா. குற்றம்சாட்டப்பட்டவர்கள், வாய்தா கேட்டு நேரத்தை இழுத்தடிக்க முயன்றபோதெல்லாம், மிகவும் தடை போட்டவர்.
உணர்ச்சிவசப்படுவார்
ஆனால் ஆச்சாரியாவிடம் சிலர் கூறும் ஒரு குறை அவர் மிகவும் உணர்ச்சிமயமானவர் என்பதுதான். நெருக்கடி வந்தபோது பதவி விலகியதாகட்டும், அதுகுறித்து புத்தகம் வெளியிட்டதாகட்டும், அவரது உணர்ச்சிவசத் தன்மையை காட்டுபவையாகவே இருந்தன என்கிறார்கள்.
அமைதியின் வடிவம்
அதேநேரம் பவானிசிங் எப்போதுமே அமைதியே சொரூபமானவராக அறியப்படுபவர். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் கவலையில்லை என்பதை போல இருப்பவர். பவானிசிங் ஆஜராக வரும்போது, ஆச்சாரியா ஏறத்தாழ அனைத்து வாதத்தையும் முடித்திருந்தார். எனவே, பவானிசிங்கிற்கு பெரிதாக வேலையில்லை.
ஹைகோர்ட்டில் பல்டி
ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு முதலில் ஜாமீன் வேண்டாம் என்று மறுத்தவர், பிறகு ஜாமீன் கொடுத்தால் ஆட்சேபனையில்லை என்று தெரிவித்தார். அப்பீல் மனுவின்போது அதிகம் பேசவில்லை. 150 பக்க பதிலை தாக்கல் செய்திருந்தார்.
மவுனம்
குற்றவாளிகள் தரப்பு தங்கள் கட்சிக்காரரை காப்பாற்ற முயலும்போது, அதன் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி தக்க பதிலடி கொடுக்க வேண்டியவர் அரசு தரப்பு வக்கீல். ஆனால், அப்பீல் மனுவின்போது பெரும்பாலும் மவுனமாகவே இருந்தார் பவானிசிங்.