பெங்களூர் உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாறின! மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது
பெங்களூர்: மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னட பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில அரசு நேற்றிரவு அறிவிக்கை வெளியிட்டது.
பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களில் ஆங்கில வாசம் அடிப்பதாக கருதியது 2008ல் கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு. இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்களை லேசான மாறுதலுடன் கன்னட பெயர்களாக மாற்றி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக வருவாய் துறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு, பெயர் மாற்றத்துக்கு பிறகு ஒப்புதல் வழங்கியது. அதாவது, ஒரு மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 6 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் பெயர்மாற்ற ஒப்புதலை கர்நாடக அரசுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தது. இன்று நவம்பர் 1ம்தேதி கர்நாடக மாநிலம் உதயமான 'கர்நாடக ராஜ்யோத்சவா' என்பதால் இன்று முதல் பெயர் மாற்றம் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிக்கையை கர்நாடக மாநில அரசு நேற்று இரவு அறிவித்தது.
தற்போதுள்ள நகரங்களின் பெயர்களும், இனி அவற்றின் மாறுதலையும் பார்ப்போமா:
பெங்களூர்-பெங்களூரு
மங்களூர்-மங்களூரு,
பெல்லாரி-பல்லாரி,
பிஜாப்பூர்- விஜயபுரா
பெல்காம்-பெலகாவி,
சிக்மகளூர்-சிக்கமகளூரு,
குல்பர்கா-கலபுர்கி,
மைசூர்-மைசூரு,
ஹோஸ்பேட்-ஹொசப்பேட்டே,
ஷிமோகா- ஷிவமொக்கா,
ஹூப்ளி- ஹுப்பள்ளி,
தும்கூர்-துமகூரு.
இவ்வாறு நகரங்களின் பெயர்கள் கன்னடத்தில் மாற்றப்பட்டுள்ளதற்கு கன்னட எழுத்தாளர்கள், மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனிமேல் ஆவணங்கள் அனைத்திலும், பெயர் பலகைகளிலும் பெங்களூரு என்றுதான் பெயர் இருக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications