பெங்களூரில் பள்ளிக்குள் சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல்
பெங்களூர்: பெங்களூர் நகரில், பள்ளி வளாகத்திலேயே, பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறிய பதிலால் சக மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பப்போவதில்லை என்று கூட்டாக முடிவெடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்றத்தனமாக பதிலால் கோபமடைந்த பெற்றோர்கள் இன்றும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சக ஊழியர்கள்
பெங்களூர், மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவி அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களாலேயே பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாணவி அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பெற்றோர் ஆர்ப்பாட்டம்
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவ, மாணவிகளின் பெற்றோரும் ஒன்று திரண்டு வந்து பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். புதன்கிழமை ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், வியாழக்கிழமையான நேற்று வன்முறையாக மாறியது. பள்ளியிலுள்ள பொருட்களை பெற்றோர் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சிறுமி வாக்குமூலம்
இந்நிலையில் போலீசார் சிறுமியிடம் பேச்சு கொடுத்து, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டது யார் என்று கேட்டு வருகின்றனர். சிறுமி கூறிய அங்க அடையாளங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும், செக்யூரிட்டியுடன் ஒத்துப்போனது. ஆனால் அவர்களை சிறுமி முன்பாக அணிவகுப்பு நடத்த செய்தபோது யாரையும் கைகாட்டவில்லை.
வேன் டிரைவர்
சிறுமி போலீசாரிடம் மீண்டும் தெரிவித்த தகவல்கள் வேன் டிரைவருடன் ஒத்துப்போனதால் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரும் இல்லை என்று கூறிவிட்டாள் சிறுமி. குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயாவும் சேர்ந்துதான் சில 'அங்கிளுடன்' தன்னை அனுப்பி வைத்ததாகவும் அவர்கள்தான் தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் ஒருமுறை சிறுமி கூறியுள்ளாள்.
மனநலம் பாதிப்பா
சிறுமி மாற்றி மாற்றி கூறிவருவதால் குற்றவாளிகளை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. இதனிடையே சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகம் போராட்டம் நடத்திய பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர். பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பள்ளி புறக்கணிப்பு
வரும் செவ்வாய்க்கிழமை பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளியை புறக்கணித்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றுகூறி, சமாதான தூதுவிட்டுக்கொண்டுள்ளதாம் பள்ளி நிர்வாகம்.