28 வங்கிகளில் ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி: குஜராத் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு!
அகமதாபாத்: 28 வங்கிகளில் ரூ22,842 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத்தின் ABG ஷிப்யார்ட் நிறுவனம் மீது அன்னிய செலாவனி மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தொழிலதிபர்கள் தப்பி ஓடுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படி தப்பி ஓடிய தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக உலவுகின்றனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் பலன் தரவும் இல்லை.
இதன் உச்சமாக இப்போது ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏபிஜி ஷிப்யார்டு
குஜராத்தின் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஸ்வினி குமார் ஆகியோர் மீது வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது அன்னிய செலாவணி மோசடி தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

98 நிறுவனங்களுக்கு மடைமாற்றம்
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது மொத்தம் 98 நிறுவனங்களுக்கு வங்கி கடன்களை மடைமாற்றி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல்கள் பழுது பார்க்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த மோசடிகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விரைவில் நோட்டீஸ் அனுப்பவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வங்கி கடன் மோசடி விவரம்
இந்தியாவில் இதுவரையிலான வங்கி கடன் மோசடிகளில் மிக பெரிய அளவிலானது இது. கடந்த வாரம் சிபிஐ வழக்குப் பதிவு செய்ததுடன் ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடாமல் இருக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏபிஜி நிறுவனம், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ2,925 கோடி, ஐசிஐசிஐயில் ரூ7,089 கோடி, இடிபிஐ வங்கியில் ரூ3,634 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ1,614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 1,244, ஐஓபியில் ரூ1,228 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்
கடந்த 2019-ம் ஆண்டே ஏபிஜி நிறுவனம் மோசடி நிறுவனம் என வங்கிகள் பட்டியலிட்டிருக்கின்றன. ஆனாலும் தற்போதுதான் இந்த மெகா வங்கி கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications