வங்கிகளில் இதுவரை 8.45 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்!
இம்மாதம் 27ம் தேதி வரையில் பல்வேறு வங்கிகளில் சுமார் 8.45 லட்சம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: நாடுமுழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் சுமார் 8.45 லட்சம் கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இம்மாதம் 10-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாயிலாக ரூ. 2.16 லட்சம் கோடி பண விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிகளில் டெபாசிட் மற்றும் ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுத்த வகையில் இத்தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வசதி ரிசர்வ் வங்கி, மண்டல் ஊரக வங்கிகள், வணிக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 10-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் ரூ. 8 லட்சத்து 44 ஆயிரத்து 982 கோடி டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதில் 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை 33,948 கோடியும் 1000 ரூபாய் நோட்டுகள் 8 லட்சத்து 11 ஆயிரத்து 33 கோடியும் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மற்றும் ஏடிஎம் வாயிலாக வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 617 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
தினமும் நாள் ஒன்றுக்கு வங்கி மையங்கள் மற்றும் ஏடிஎம் வாயிலாக ரூ.2500 வீதம் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.