இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு தடை விதிக்க வேண்டிய நேரம் இது!
டெல்லி: இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா? ஹாஜா பக்ருத்தீன், ஆரீப் மஜீத், தற்போது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள்.
பெங்களூர் போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றபோது மெஹ்தி மஸ்ரூர் அமைதியாக இருந்தார். இந்தியாவில் தான் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவர் உள்ளிட்ட சில இளைஞர்கள் துணிச்சலுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு அளிப்பது தெரிகிறது.
ஐஎஸ்ஐஎஸ் ஒரு குறிக்கோளுடன் செயல்படுகிறது, அது தீவிரவாத அமைப்பு இல்லை என்று ஒரு வாலிபர் நம்புவது மகிவும் அபாயகரமானது. இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
இணையதள உலகம்:
இணையதளம் மூலம் பல இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதையே அண்மை சம்பவங்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் பிரச்சனையை இந்தியா வித்தியாசமான முறையில் அணுகி வருகிறது. இளைஞர்களை தண்டிக்காமல் அறிவுரை வழங்குகிறது. இந்த முறையில் இந்தியா வெற்றிக் கண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைபவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
ஆனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்துவர்கள் இருக்கையில் இந்த அணுகுமுறை எப்பொழுதும் கைகொடுக்காது. இந்தியாவின் அணுகுமுறை பல வாலிபர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. சொல்லப் போனால் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ரசிகர்களாகிவிட்டனர். ஐஎஸ்ஐஎஸ் ஆப்கானிஸ்தானுக்கு வரும் பின்னர் இந்தியாவிலும் செயல்படும் என்று அவர்கள் திட்டவட்டமாக நம்புகிறார்கள்.
அமைப்புக்கு தடை இல்லாத காரணத்தால் தங்கள் மீது பெரிய வழக்கு எதையும் தொடர முடியாது என்பது அந்த வாலிபர்களுக்கு தெரியும். இந்திய தண்டனை சட்டம் 125ன்படி நட்பு நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு தண்டனை உண்டு என்றாலும் இந்த வழக்குகளில் ஆதாரங்களை திரட்டுவது கடினம். ஐடி சட்டம் மூலமே வலுவான வழக்கை தொடர முடியும். ஆனால் அதுவும் முறையாக செயல்படவில்லை.
தடையால் 80 சதவீத நடவடிக்கை குறைந்துள்ளது:
முன்னாள் ரா தலைவர் சி.டி. சஹாய் கூறுகையில், தடை தான் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த உதவுகிறது. தடையால் தீவிரவாதத்தை முழுவதுமாக அழித்துவிட முடியாவிட்டாலும் பிரச்சனையை 70 சதவீதம் கட்டுப்படுத்த முடிகிறது. சிமிக்கு விதிக்கப்பட்ட தடையை எடுத்துக் கொள்ளுங்கள். தடையால் அவர்கள் செயல்பட முடியாமல் உள்ளது.
தடை விதிப்பதற்கு முன்பு அவர்கள் வெளிப்படையாக செயல்பட்டனர். அவர்களின் கொள்கைள் வெளியிடப்பட்டு ஒரு இயக்கமாக இருந்தனர். ஆனால் தடைக்கு பின்னால் அவர்கள் மறைவாக உள்ளனர். அவர்களுக்கு வரும் நிதி பற்றி கண்காணிக்கப்படுவதால் அவர்களின் நிதி நிலைமை மோசமாகிவிட்டது.
தடை விதிப்பதால் 100 சதவீதம் தீவிரவாதத்தை அழிக்க முடியாது என்றாலும் அவர்களின் செயல்களை 80 சதவீதம் குறைக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சர்வதேச இஸ்லாமிய கவுன்சில்:
ஐஎஸ்ஐஎஸ் என்பது தீவிரவாத அமைப்பு என்பதோடு நின்றுவிடவில்லை. பல இளைஞர்களுக்கு அது வாழ்வின் ஒரு முறையாகிவிட்டது. உலக அளவில் செயல்படப் போவதாக ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்திருப்பது இந்தியாவுக்கு கவலை அளித்துள்ள விஷயம். அந்த அமைப்பு தயாரித்துள்ள சர்வதேச இஸ்லாமிய கவுன்சில் வரைபடத்தை பார்த்தால் அதில் இந்தியாவும் உள்ளது. ஏராளமான இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பக்கம் ஈர்க்கப்படுவது தான் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. மஸ்ரூர், மஜீத், பக்ருத்தீன் ஆகியோர் ஹீரோவாகினால் பலர் அவர்கள் வழியை பின்பற்றுவார்கள். இந்த சம்பவங்கள் மூலம் தடை இன்மை மற்றும் வலுவான சட்டம் இல்லாதது ஆகியவற்றால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து தப்பிக்கலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
புலனாய்வுத் துறை:
தடை இல்லாததால் புலனாய்வுத் துறையினருக்கு தான் வேலை கடினமாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பு அவர்கள் பலமுறை யோசிக்க வேண்டி உள்ளது. இணையதளங்களில் சில காரியங்கள் நடப்பதை புலனாய்வு துறையினர் வேறுவழியில்லாமல் எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த சம்பவங்கள் உண்டு. பல இளைஞர்கள் ஆதரவு தெரிவிக்கும்போதிலும் அவர்கள் மீது வழக்கு தொடர முடியவில்லை.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் புலனாய்வுத் துறை உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அணுகுமுறை:
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யத் தேவையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். தடை விதிப்பதற்கு முன்பு ஆதாரங்களை திரட்டி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். ஏனெனில் தடை விதித்த பிறகு தீர்ப்பாயத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. தீர்ப்பாயமே தடை குறித்து மறுபரிசீலனை செய்கிறது.