"அண்ணன்" வருகிறார்... அறிய வேண்டிய பத்து முக்கியமான மேட்டர்கள் இவைதான்!
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிஷல் ஒபாமாவுடன் 3 நாள் இந்திய பயணத்தை ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறார்.
ஒபாமா வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு டெல்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒபாமாவுக்கு 7 அடுக்கு பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளில் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒபாமாவின் வருகை தொடர்பான பத்து முக்கியமான அம்சங்கள் இவை:
முதல் அதிபர்
இந்திய குடியரசு தின விழாவில் இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில்லை. அந்த வகையில் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா சிறப்பு பெறுகிறார்.
மனைவி - அதிகாரிகள் புடை சூழ
குடியரசு தின விழாவில் தனது மனைவி மிஷல் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொள்கிறார் ஒபாமா.
6 விமானங்களில் பாதுகாப்பு அதிகாரிகள்
ஒபாமாவின் பாதுகாப்புக்காக 6 விமானங்களில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், கமாண்டோக்கள் வருகிறார்கள். அதிபரின் பாதுகாப்பு வாகனங்கள் என்ற வகையில் மட்டும் 30 கார்கள் வருகின்றனவாம். அதில் ஒன்று கேடிலாக் ஒன். இதுதான் உலகின் அதி நவீனமான, பாதுகாப்பான காராகும். இதில்தான் ஒபாமா பயணிப்பார். இதுபோக அமெரிக்க கடற்படையின் மெரைன் ஒன் ஹெலிகாப்டர்களும் வருகின்றன. மேலும் ஒபாமா பயணிப்பது அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வமான விமானமான ஏர்போர்ஸ் ஒன் (இதைப் பற்றி எழுத வேண்டுமானால் பத்து மல்ட்டி பேஜ் ஸ்டோரி போடனும்).
முதல் நாளில்
தனது 3 நாள் பயணத்தின்போது முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒபாமா சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இரு தரப்பு உறவுகள், குறித்து இப்பேச்சுவார்த்தையில் இடம் பெறவுள்ளது. அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசப்படும். இந்தியாவில் அமெரிக்காவின் உதவியுடன் கட்டப்படும் அணு சக்தி நிலையங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசுவார்கள்.
2வது நாள்
2வது நாளான ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ஒபாமா. அதன் பின்னர் மோடியும், ஒபாமாவும், இந்திய அமெரிக்க சிஇஓ மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
3வது நாள்
3வது மற்றும் கடைசி நாளில் டவுன்ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் ஒபாமா உரை நிகழ்த்துவார்.
தாஜ்மஹாலைப் பார்க்கனுமே அன்னமே அன்னமே...!
இந்தியாவை விட்டு கிளம்பும் முன்பு தனது மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு செல்ல ஒபாமா திட்டமிட்டுள்ளாராம்.
தீவிரவாத அச்சுறுத்தல்கள்
ஒபாமா வருகையின்போது தீவிரவாதிகள் வாலாட்டலாம் என்ற அச்சம் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஏற்கனவே இதுதொடர்பாக மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் பல மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்கும் வகையில் ராணுவமும் விழிப்புணர்வுடன் உள்ளது.
டெல்லி முழுக்க பலத்த பாதுகாப்பு
ஒபாமா வருகையை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் தீவிரவாதிகள் குண்டு வைக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையில் சிறப்புப் பிரிவு போலீஸாரும், குற்றப் பிரிவு போலீஸாரும் மிகத் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பூத்தொட்டிகளை எங்கு பார்த்தாலும் முழுமையாக பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக குடியரசு தின விழா அணிவகுப்புநடைபெறும் ராஜ்பாத்திலும், இந்தியா கேட் பகுதியிலும் பூத்தொட்டிகள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத பாதுகாப்பு
ஒபாமா வருகை நல்லபடியாக அமைவதை உறுதி செய்வதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸாரும், ராணுவமும் மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவின் எப்பிஐ, சிஐஏ ஆகியவற்றுடன் இணைந்து நமது தேசிய பாதுகாப்பு ஏஜென்சியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடிவமைத்துள்ளன.