நாட்டின் இரண்டாவது தலைநகராக பெங்களூரை அறிவிக்கலாம்... பிரதமருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்!
நாட்டின் இரண்டாவது தலைநகரமாக பெங்களூருவை அறிவிக்க அந்த மாநில அமைச்சர் தேஷ்பாண்டே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில தொழிற்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாவைப் போன்று மிக வேகமாக முன்னேறி வரும் நாடு ஒரு இடத்தை மட்டும் தலைநகராக கொண்டு இயங்குவது, வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தும் .அதனால் பெங்களூருவை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனை வலியுறுத்தி அம்மாநில சிறு மற்றும் பெரு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், இந்தியாவைப் போன்ற ஆளுமை, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், தேசிய புனரமைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு முன்மாதிரியான மற்றும் தீவிர மாற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்து செல்லும் ஒரு நாட்டை, ஒரு நகரில் இருந்து ஆட்சி செய்வது கடினமானதாகும்.

பெங்களூரு சரியான தேர்வு
இந்தியாவுக்கு உடனடியாக இரண்டாவது தலைநகர் தேவை, அதற்கு பெங்களூரு சரியான இடமாக இருக்கும். இந்தியாவிலேயே அதிகபடியாக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் மொழி கல்வியாளர்கள் பெங்களூருவில் தான் உள்ளனர். சர்வதேச அளவில் டெல்லிக்கு அடுத்து அதிகபடியான மாணவர்கள் மற்றும் வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் இங்கு தான் வசிக்கின்றனர்.

சரியான தட்ப வெட்ப சூழல்
தென்னிந்தியாவில் அமைந்துள்ள பெங்களூரு நகரானது, இயற்கை பேரிடர்களால் அதிக அளவில் பாதிப்புகளுக்கு ஆளானது கிடையாது. அதே சமயம் தட்பவெட்ப சூழல்களும் சரியாக இருக்கும். பெங்களூருவில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்துதல், இரண்டாவது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், இரண்டாவது சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அமைக்கப்படுவதே நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.

வர்த்தகம் பெருகும்
தென்னிந்தியாவில் ஒரு தலைநகர் அமைக்கப்படுவதன் மூலம் வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் அதிகரிக்கும். இதே போன்று விஞ்ஞானம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போன்றவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அந்தக்கடிதத்தில் அமைச்சர் தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

புதிய கோரிக்கை வைக்கும் கர்நாடகா
அண்மையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் டெல்லி கடுமையான மாசு பிரச்னையை சந்தித்து வருவதால் நாடாளுமன்றத்தை தமிழகத்தில் நடத்தலாம் என்று பேசிய நிலையில், பெங்களூருவை இரண்டாவது தலைநகராக அறிவிக்கக் கோரி கர்நாடக அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications