மாநகராட்சி மைதானத்திற்கு உரிமை கொண்டாடும் ஆளும் கட்சி பிரமுகர்.. அதிர்ச்சியில் பெங்களூர் மக்கள்
பெங்களூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு மைதானத்தை சுற்றிலும் ஆளும் கட்சி பிரமுகர் இரும்பு கம்பி வேலி அமைத்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெங்களூர்: பெங்களூர் இந்திராநகர் பகுதியில் உள்ள டிபன்ஸ் காலனி பகுதியில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் மாநகராட்சிக்கு சொந்தமான, விளையாட்டு மைதானத்திற்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு இரும்பு வேலி அமைத்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெங்களூர் இந்திராநகர் பகுதியிலுள்ளது டிபென்ஸ் காலனி. ராணுவ வீரர்களின் குடும்பத்தார் கணிசமாக வசிக்கிறார்கள். இந்த பகுதியிலுள்ள காலி இடத்தை அப்பகுதி மக்கள் பூங்கா போலவும், விளையாட்டு மைதானம் போலவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் அந்த காலி இடத்தை சுற்றிலும், இரும்பு கம்பியால் சிலர் வேலி போட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் இதற்கு வேலி போட்டு உரிமை கொண்டாடுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து ஹொய்சாலாநகர், வார்டு 80ன், மாநகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 'தனி நபருக்கு சொந்தமான நிலம்' என்ற ஒரு போர்டு வேலியை ஒட்டி தொங்கிக் கொண்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தும் பலனில்லை.
மாநகராட்சியும், காவல்துறையும், இந்த ஆக்கிரமிப்பை கண்டுகொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். "நவம்பர் 13ம் தேதி புகார் அளித்தும், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மாநகராட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கிறார் டிபென்ஸ் குடியிருப்புவாசிகள் சங்க தலைவர் ராஜ்மன்னார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆகும்.
இனியாவது மாநகராட்சி, காவல்துறை உதவியோடு உரிய நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.