வெறிச்சோடிய பெங்களூர் சாலைகள்: 5 கி.மீட்டருகக்கு ரூ.500 கேட்கும் ஆட்டோக்கள்
பெங்களூர்: இன்று நாடு முழுவதும் நடக்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி பெங்களூர் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல போக்குவரத்து சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பொது வேலைநிறுத்தத்தையொட்டி பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் அரசு பேருந்துகள் ஓடவில்லை. சில இடங்களில் ஒன்று, இரண்டு ஆட்டோக்கள் மட்டுமே ஓடுகின்றன. அந்த ஆட்டோக்களும் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லக் கூட அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
ஜெய நகரில் இருந்து மெஜஸ்டிக் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் ஜெய நகரில் இருந்து மெஜஸ்டிக் செல்ல ஆட்டோக்காரர்கள் ரூ.500 கட்டணம் கேட்கின்றனர். பேருந்துகள் ஓடாததால் மக்கள் ஆட்டோக்காரர்கள் கேட்கும் பணத்தை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியாக உள்ளனர். அலுவலகங்களுக்கு செல்வோர் தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரில் சாலைகள் காலியாக இருப்பது பலருக்கும் வியப்பளித்துள்ளது. பெங்களூரில் கூட சாலைகள் காலியாக இருக்குமா என்று மக்கள் வியந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கல்வீச்சு:
கர்நாடக மாநிலத்தில் பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் 30 பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications