''சிபிஐ இயக்குநர் வீட்டு வருகை பதிவேடு கொடுத்தவர் பெயரை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து''!
ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா தனது இல்லத்தில் சந்தித்தார் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டி இருந்தார்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் ரஞ்சித் சின்காவை நீக்கக் கோரி வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க சிபிஐ இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது பிரசாந்த் பூஷன், ரஞ்சித் சின்கா வீட்டின் வருகை பதிவேட்டை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் இந்த வருகைப் பதிவேட்டில் 90% போலியானது என்று சின்கா தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் தனது இல்ல வருகை பதிவேட்டை கொடுத்தது யார் என்பதை பிரசாந்த் பூஷன் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகை பதிவேட்டை யார் கொடுத்தார் என்ற விவரத்தை பிரசாந்த் பூஷன் வெளியிட வேண்டும் என்று அவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சிபிஐ இயக்குநர் வீட்டு வருகைப் பதிவேட்டை கொடுத்த நபரின் பெயரை வெளியிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.