‘பிட்’ அடிக்க உதவ வேண்டாம் பெற்றோர்களே… பீகார் முதல்வர் நிதீஷ் வேண்டுகோள்
பாட்னா: பிள்ளைகள் பிட் அடிக்க உதவி செய்து மாநிலத்துக்கு அவப்பெயர் சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் பாட்னாவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மனார் கிராமத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியின் 4 மாடி கொண்ட தேர்வு மையத்தின் சுவர் மீது மாணவர்களின் பெற்றோரும், நண்பர்களும் ஏறி அவர்களுக்கு விடை எழுதிய சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை படம்பிடித்த சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 515 மாணவர்கள் பிட் அடிப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிதீஷ் குமார், பிட் அடித்து மாணவர்கள் பெறும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்யாது. இவ்வாறாக பிட் அடிக்க உதவி மாநிலத்துக்கு பெற்றோர்கள் அவப்பெயர் சேர்க்க வேண்டாம். இத்தகைய தவறான செயல்களுக்கு காவல்துறையினர் யாராவது துணை போவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எழுக்கப்படும்.
ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு பீகார் மாநில மாணவர்களின் கல்வித் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. பீகார் மாநில மாணவர்கள் பலர் இன்றளவும் கல்வியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.