டெல்லியில் மீண்டும் தொங்கு சட்டசபை; பா.ஜ.க.- ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி- கருத்து கணிப்பு
டெல்லி: டெல்லி தேர்தலில் மீண்டும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்- சி சர்வே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. 49 நாட்களில் முதல்வராக இருந்த கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஓராண்டுக்கும் மேலாக ஜனாதிபதி ஆட்சியே நீடித்து வந்தது.
இந்நிலையில் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
உளவுத்துறை தகவல்களின்படி டெல்லியில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 14-18 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஹிந்துஸ்தான் டைம்ஸ்- சி சர்வே நடத்திய கருத்துக் கணிப்பில் டெல்லியில் தொங்கு சட்டசபைதான் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பானது ஜனவரி 10 முதல் 19 ஆகிய தேதிகளில் 7,147 பேரிடம் கருத்துகள் கேட்கபட்டது. பின்னர் டெல்லியின் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் 3,146 பேரிடம் ஜனவரி 24 முதல் 27 தேதிகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
'கிரண்பேடி' அறிவிப்புக்கு முன்..
கிரண்பேடியை பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 34 முதல் 39 இடங்களையும் பா.ஜ.க. 29 முதல் 34; காங்கிரஸ் 2 முதல் 7 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அறிவிப்புக்குப் பின்..
கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்த பின்னர் ஆம் ஆத்மி- பா.ஜ.க. கட்சிகளுக்கு தலா 31 முதல் 36 இடங்களும் காங்கிரஸுக்கு 2 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜ்ரிவால் மீது நம்பிக்கை
டெல்லி வாக்காளர்களைப் பொறுத்தவரையில் கேஜ்ரிவால் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளதாம். கேஜ்ரிவால் முதல்வராக 43%; கிரண்பேடிக்கு 39% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதான பிரச்சனை எது?
டெல்லியில் பிரதான பிரச்சனையாக இருப்பது ஊழல்தான் என்று 23%; பெண்கள் பாதுகாப்பு 14%, குடிநீர் பிரச்சனை 11% என்று கூறியுள்ளனர். பணவீக்க விகிதமே முதன்மை பிரச்சனை என 16% பேரும் மின்கட்டணம்தான் பெரிய பிரச்சனை என 5% பேரும் கூறியுள்ளனர்.