"தென்னைக்கு ஒரு குத்து! ஏணிக்கு ஒரு குத்து".. இமாச்சல தேர்தல்.. இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 6-12 பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
இன்று கட்சி தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபத்யாயா சார்பில் 'இலவசங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாஜகவின் தேர்தலை அறிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அட! அண்ணாமலையை புறக்கணிக்கலை.. இமாச்சல பிரதேச தேர்தலில் வானதி சீனிவாசன் சூறாவளி பிரசாரம்!
மாநில அரசுகளின் வளர்ச்சி
மத்திய அரசின் வளர்ச்சியை காட்டிலும் சில மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. இது மத்திய அரசின் புதிய திட்டங்களின் அறிவிப்புக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. உதாரணமாக புதிய கல்விக்கொள்கையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவுக்கு உயரும் எனவே இந்த கல்விக்கொள்கை தேவை என மத்திய அரசு கூறுகிறது எனில், ஒரு சில மாநில அரசுகள் இத்திட்டதை ஏற்க மாட்டோம் என்று மறுத்துவிடுகிறது. ஏனெனில் ஏற்கெனவே மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட மாநில அரசின் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
அரசியல்
இப்படி ஒவ்வொரு திட்டத்தின் அறிவிப்பின்போதும் மாநில அரசுகள் சில திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும், இத்திட்டத்தினால் செய்ய வேண்டியதை நாங்கள் முன்கூட்டியே செய்து முடித்துள்ளோம் என்றும் கூறி வருகிறது. இது மத்திய அரசின் வாக்கு வங்கி அரசியலுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது. எனவே இனி தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க கூடாது என பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்த தொடங்கின. இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அஸ்வினி உபத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனு
அதில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தை பாஜக நாடியபோது, 'இவ்வாறு உத்தரவிட தனக்கு அதிகாரம் இல்லை' என்று கூறி ஆணையம் கைவிரித்துவிட்டது. எனவேதான் பாஜக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கேள்வி
இவ்வாறு இலவசங்களுக்கு எதிராக பாஜக தொடர்ச்சியாக குரல் குடுத்துவரும் நிலையில், இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி "6-12 பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்" என பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. கட்சி தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இந்த வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒருபுறம் இலவசங்களுக்கு எதிராக பேசி, உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டு, மறுபுறம் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பது எப்படி பொருத்தமாக இருக்கும்? என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
கடிதம்
முன்னதாக இலவச திட்டங்கள் தொடர்பாக கடந்த மாதம் 4ம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்திற்கு பதில் எழுதியிருந்த பாஜக, "இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படக் கூடாது. இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.