ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வந்தன.
இரு தரப்பும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மேலும் சர்ச்சைகளில் இல்லாத ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜோஷியே தேவை
இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவை அப்படியே கைவிடப்பட்டன. பாஜக மூத்த தலைவரான ஜோஷியை தேர்ந்தெடுக்க ஆர்எஸ்எஸ் விரும்பியது.
பாபர் மசூதி இடிப்பு
அதற்கு மோடி ஒப்புக் கொண்ட நிலையில், ஜோஷியின் பெயர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அடிப்பட்டது. இதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரின் பெயரும் அடிபட்டது.
பாஜக வேட்பாளர் தேர்வு குழு
பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வெங்கைய்யா நாயுடுவின் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. பாஜக வேட்பாளர் தேர்வு குழுவில் வெங்கைய்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு இல்லை என்பது தெளிவானது.
சுஷ்மா மறுப்பு
இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜுக்கு அண்மையில் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவரால் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது முடியாத நிலை ஏற்பட்டதால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுஷ்மா அந்த தகவலை மறுத்தார்.
பாஜக ஆட்சி மன்றக் கூட்டம்
இதைத் தொடர்ந்து வரும் 23-ஆம் தேதிக்குள் பாஜக வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதால் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்த கூட்டத்தின் முடிவில் பீகார் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.