குஜராத்.. முதல்வர்கள், துணை முதல்வர், எம்பிக்கள்.. களமிறங்கும் பாஜக பட்டாளம்.. திணறும் காங்கிரஸ்!
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரத்தை பாஜக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது. இதில் ஜே.பி.நட்டா உட்பட பல முக்கிய தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் ஆகியோர் பிரசாரத்தில் பங்கெடுக்கின்றனர்.
கடந்த 27 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குஜராத் தேர்தலில் பாஜக போடும் புது கணக்கு..20 ஆண்டுகளில் முதல் தடவை..கிறிஸ்தவ வேட்பாளர் களம் இறக்கம்
வெற்றி
குஜராத் தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் இதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாடலை மீண்டும் முன்னிறுத்த பாஜக யோசித்து வருகிறது. இதற்கு குஜராத்தில் பாஜக ஜெயிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் இந்த வெற்றியை கேள்விக்குறியாக்கியுள்ளன. அதாவது, மோர்பி பாலம் விபத்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் என பல பிரச்னைகள் குஜராத் தேர்தல் வெற்றிக்கு குறுக்கே நிற்கின்றன. இந்நிலையில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
பேரணி
இவ்வாறு இருக்கையில் தேர்தல் பிரசாரத்தை பலப்படுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. பிரசாரங்களில் பிரபலங்களின் பலர் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதன்படி நவ்சாரி, அங்கலேஷ்வர் மற்றும் ராஜ்கோட் கிழக்கு என மூன்று இடங்களிலும் நட்டா பேரணியை நடத்த இருக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மூன்று இடங்களிலும், நரேந்திர சிங் தோமர் மற்றும் அனுராக் சிங் தாகூர் என இருவரும் தலா நான்கு இடங்களிலும் சிறப்புரையாற்றி பிரசாரத்தை மேற்கொள்வார்கள்.
முதலமைச்சர்கள்
இவர்களைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூன்று பேரணிகளில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நான்கு பேரணிகளில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதேபோல மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் வி.கே.சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே என பல முக்கிய புள்ளிகளும் பேரணிகளில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள 89 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக வரும் 1ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே முதல் கட்டமாக அனைத்து தொகுதிகளும் சூறாவளி பிரசாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ்
பாஜக நிலைமை இவ்வாறு இருக்கையில், காங்கிரஸ் தரப்பிலும் பரப்புரை மேற்கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், மல்லிகர்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி என பட்டியல் நீள்கிறது. ஆனால், இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை. காங்கிரஸ் பெரும் தலைவர்களை கொண்டு பிரசாரம் நடத்தி வாக்குகளை கவர்வதை விட, உள்ளூர் பிரபலங்களை கொண்டு வீடு வீடாக பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான அளவில் வாக்கு கிடைத்திருந்த நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி இந்த வாக்கு வங்கியை கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது.