நான் தமிழ்நாட்டுக்கு வர்றதுக்குள்ள.. அதிமுகவுக்கு அமித் ஷா கொடுத்த மெசேஜ்!
டெல்லி: எனது தமிழக சுற்றுப்பபயணத்துக்கு முன்பாகவே இருவரும் இணைந்து விடுங்கள் என்று அதிமுகவின் இரு அணிகளுக்கும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்த அதிரடிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். 'அமைச்சர்களை கட்சியில் விட்டு நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிடும் முடிவில் இருக்கிறார் தினகரன். அதேநேரம், எடப்பாடி பக்கத்தில் இருந்து கொண்டே தினகரனுக்குத் தூது அனுப்பும் எம்.எல்.ஏக்களையும் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது உளவுத்துறை. அமித் ஷா வருகைக்கு முன்னதாகவே அணிகள் இணையலாம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்தும் அறுவை சிகிச்சையை பகிரங்கமாகத் தொடங்கியிருக்கிறார் பழனிசாமி. பன்னீர்செல்வம் தரப்பிடம், ' கட்சியின் வழிகாட்டும் குழுத் தலைவராக நீங்கள் இருங்கள். பாண்டியராஜன், செம்மலை ஆகியோரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறோம்' என உறுதியாகக் கூறிவிட்டனர். ' சசிகலாவை நீக்கிவிட்டு எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டது ஓபிஎஸ் அணி. இந்நிலையில், அமித் ஷா வருகையையொட்டி, இணைப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.கவின் இரு அணிகளும்.
22ம் தேதிக்குள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், "வரும் 22ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அமித் ஷா. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு அவரது பயணம் தடைபட்டதற்குக் காரணம், அ.தி.மு.கவில் நீடித்த உள்கட்சி குழப்பங்களும் சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்குள் நடந்த மோதல்களும்தான். தமிழிசைக்கு எதிராக டெல்லியிலேயே புகார் வாசித்தனர் பொன்.ராதாகிருஷ்ணனும் வானதி தரப்பும். இதனை ஏற்காத அமித் ஷா, ' தலைவராக அவரே தொடரட்டும்' எனக் கூறிவிட்டார்.
2 நாள் சென்னையில் தங்கல்
அமித் ஷா வருகையின்போது, முதல் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அதற்குள் அ.தி.மு.க அணிகள் இணைந்து ஒரே அணியாக மாறிவிட வேண்டும் என விரும்புகிறார். பிரதமர் வந்தபோதும், இதை அவர்களிடம் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். ' நீங்கள் இருவரும் சமாதானமாகப் போனால்தான், சின்னமும் கிடைக்கும். கட்சியும் நீடிக்கும்' எனக் குறிப்பிட்டார் அமித் ஷா. அவருடைய வருகைக்கு இன்னும் சில நாட்களே மீதம் இருக்கும் நிலையில், தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
பாஜக போடும் கணக்கு
'தமிழகத்தில் நம்முடன் கூட்டணி அமைப்பதற்கு தி.மு.க விரும்பாது. ஒன்றுபட்ட அ.தி.மு.க இருந்தால்தான், வரக் கூடிய தேர்தல்களில் வலுவான வெற்றியைப் பெற முடியும்' என பா.ஜ.க தலைமை நினைக்கிறது. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் அளவுக்கு இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் அமித் ஷா. கூடவே, கொங்கு மண்டலத்தின் பல தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. கோவை எம்.பி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
கொங்கு வாக்குகளுக்குக் குறி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் 37 ஆயிரம் வாக்குகளை வாங்கினார் வானதி சீனிவாசன். பா.ஜ.கவின் தனிப்பட்ட செல்வாக்கைவிட, கொங்கு சமூகத்தை முன்னிறுத்தும் சிறு கட்சிகள் நல்ல வாக்குகளைப் பெறுகின்றன. இந்தக் கட்சிகளை எல்லாம் பா.ஜ.கவுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்த முடியும் என நினைக்கின்றனர்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போல
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போல, சமுதாயரீதியில் செல்வாக்கு உள்ளவர்களை, அணிக்குள் சேர்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன. சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி செல்லும்போது, மிகுந்த உற்சாகத்தோடு செல்ல முடிவு செய்திருக்கிறார் அமித் ஷா. பயணத் திட்டத்தில் சொதப்பல் இருக்கக் கூடாது என ரொம்பவே மெனக்கெடுகிறார் தமிழிசை" என்றார் விரிவாக.