இமாச்சல பிரதேசம்.. டஃப் தரும் காங்கிரஸ்.. ஆட்சியை பாஜக தக்க வைக்கும்- ரிபப்ளிக் டிவி எக்சிட் போல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும், அந்த கட்சி 34-39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மலைப்பிரதேசங்களையும் பனிபடர்ந்த ரம்மியமான இயற்கை சூழலையும் கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.
குஜராத்தில் தாமரை மீண்டும் மலரும்! காங்கிரஸை விட ஆம் ஆத்மி மோசம் - வெளியான டிவி 9 கருத்துக்கணிப்பு
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் விடாப்படியாய் இருக்கும் பாஜக இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேநேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது.
எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமைதான் நடைபெறுகிறது. இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.
பாஜகவுக்கு வெற்றி
அதன்படி ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில், மீண்டும் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி பாஜக 34 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களில் வெற்றி பெறும் என்றும்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 0-1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிகிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உண்மையான தீர்ப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. அதேபோல், குஜராத்திலும் பாஜகவுக்கு சாதகமாகவே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி வந்துள்ளன. இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும் இது கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டுமே என்பதும் கவனித்தக்கது. மக்களின் உண்மையான தீர்ப்பு என்னவென்பது வரும் 8 ஆம் தேதி தெரிந்துவிடும்.