மகாராஷ்டிராவில் 14 சுயேட்சை எம்.எல்.ஏக்களை இழுக்க பா.ஜனதா முயற்சி
மும்பை: மகாராஷ்டிராவில் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அங்கு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 288. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை.
பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. சிவசேனா 63 தொகுதியிலும், காங்கிரஸ் 42 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
சுயேட்சைகள் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சிறிய கட்சிகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக தயாராக இல்லை
பாஜக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அதன் ஆதரவைப் பெற பாஜக தயாராக இல்லை.
தயக்கம் ஏன்?
காங்கிரஸ் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்று இருந்தது. அந்த கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இதனை முன்னிலைப்படுத்தி தான் பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
இந்த தேர்தலில் மக்கள் அந்த கூட்டணியை தோற்கடித்துவிட்டார்கள். எனவே தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பாஜக கருதுகிறது.
சிவசேனா..
பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவைப் பெறவும் தயக்கம் காட்டுகிறது.
சுயேட்சைகளுக்கு வலை
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சுயேட்சைகள் 14 பேர் இருப்பதால் அவர்களை இழுக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. ஓரிரு எம்.எல்.ஏக்கள் கொண்ட சிறிய கட்சியை இழுக்கவும் முயற்சி நடக்கிறது.
சிவசேனாவுக்கு செக்
இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதன் மூலம் சிவசேனா ஆதரவு அளிக்க முன்வந்தாலும் அது பெரிதாக நிபந்தனை எதுவும் விதிக்க முடியாது என்று பாஜக கருதுகிறது.