திருட்டை கண்டுபிடித்த திருட்டு! கருப்பு பண பட்டியலில் இந்தியர்கள் பெயர் அம்பலமானது இப்படித்தான்!!
டெல்லி: கொலை, கொள்ளை, களவு, திருட்டு போன்றவை தீமைபயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு திருட்டுதான் சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கி வைத்தவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பது சுவாரசியமான தகவலாகும்.
சுவிச்சர்லாந்திலுள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கியில்தான் இந்தியாவை சேர்ந்த 628 பேர் வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த பணத்தை கொட்டி வைத்திருந்தனர். கருப்பு பண விவகாரம் சர்ச்சையாக வெடித்தபோது, இந்தியர்கள் பெயர் பட்டியலை சுவிஸ் அரசிடம் கேட்டது இந்திய அரசு.
சுவிட்சர்லாந்து மறுப்பு
ஆனால் எடுத்த எடுப்பிலேயே, அதெல்லாம் எங்களால் முடியாது. எங்கள் நாட்டை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது என்று இந்தியாவின் கோரிக்கையை துச்சமாக கருதி புறக்கணித்தது சுவிட்சர்லாந்து.
சுட்ட பெயர்
இந்நிலையில்தான், ஜெனிவாவிலுள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றிய பிரான்சு நாட்டுக்காரர் ஒருவர் அந்த வங்கியில் பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியலை நைசாக சுட்டுவிட்டார்.
பிரான்ஸ் செய்த புண்ணியம்
இந்த பட்டியல் 2008-09ம் ஆண்டுவாக்கில் பிரான்ஸ் நாட்டு கைகளுக்கு சென்று சேர்ந்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அப்பட்டியலை 2011ல் பிரான்ஸ் ஒப்படைத்தது. அதேபோல ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும், திருடப்பட்ட பட்டியலை சப்ளை செய்தது பிரான்ஸ்.
பட்டியலில் இருப்பவை இவைதான்
இந்தியாவின் கைகளுக்கு கிடைத்த பட்டியலில் மொத்தம் 628 பேரின் பெயர்கள் இருந்தன. பெயர், முகவரி, அக்கவுண்ட் எண் மற்றும் இருப்பு தொகை ஆகிய விவரங்கள் அந்த பட்டியலில் இருந்தன. பெரும்பால பெயர்கள் மேத்தா, பட்டேல் என்று முடிந்தன. அதிகபட்சமாக ஒரே கணக்கில் 18 மில்லியன் டாலர்கள் உள்ளன. அவர் ஒரு தொழிலதிபராகும்.
சட்டப்படி வந்தால் நல்லாயிருக்குமே
இந்த பட்டியலை வைத்துக்கொண்டு இந்திய வருமான வரித்துறை தனது விசாரணையை தொடங்கியது. இருப்பினும், திருட்டு விவரங்கள் சட்டத்தின் முன்பு செல்லுபடியாகுமா என்ற சர்ச்சை சட்ட நிபுணர்கள் மத்தியில் வெடித்தது. இதனால் முறைப்படியாக சுவிட்சர்லாந்து இப்போதாவது, பெயர் பட்டியலை தர வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா முன் வைத்தது.
வழிக்கு வந்தது சுவிஸ்
சமீபத்தில் சுவிட்சர்லாந்துடன் இந்திய உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா கேட்கும் விவரங்களை குறிப்பிட்டகாலக்கெடுவிற்குள் அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது. ஒருவேளை விவரங்களை அளிக்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சுவிஸ் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
முள்ளை முள்ளால் எடுப்பது
இத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம், இந்த பிரான்சு நாட்டின் திருட்டு புண்ணியவான் செய்த கைங்கர்யம்தான். முள்ளை முள்ளால் எடுப்பதை போல, திருட்டுத்தனமாக சொத்து சேர்த்தவர்கள் விவரங்கள், ஒரு திருட்டு மூலமே வெளியே வந்துள்ளது.