அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்களை ஏற்படுத்த மந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டமும் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டில் சுகாதாரம் தொடர்பான அடிப்படை கட்டுமான வசதிகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மருத்துவ கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் மத்திய அரசு மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கான ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசின் பங்கு ரூ.7,500 கோடியாகவும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பங்கு ரூ.2,500 கோடியாக இருக்கும். இந்த நிதி ஒதுக்கீடு விகிதாச்சாரம் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தமட்டில் மத்திய அரசின் பங்களிப்பு 90 சதவீதமாகவும், மாநிலங்களின் பங்களிப்பு 10 சதவீதமாகவும் இருக்கும்.