நீதிபதிகளை "மை லார்ட்' 'யுவர் ஆனர்' என அழைப்பது கட்டாயமல்ல: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர், யுவர் லார்ட்ஷிப் என அழைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவசாகர் திவாரி என்ற 75 வயது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் நீதிமன்றங்களில் நீதிபதிகளை மைலார்டு, கனம் கோர்ட்டார் அவர்களே என்று அழைப்பது காலனி ஆதிக்க சகாப்தத்தின் அடையாளமாகும். எனவே இவ்வாறு அழைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கூறியதாவது:
மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் எப்போது கூறினோம்? நீதிபதிகளை "ஸார்' என்று அழைக்கலாம். "யுவர் ஆனர்', "லார்டுஷிப்' என்று அழைத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.
எனினும், இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறும், நீதிபதிகளை இதுபோன்ற பாரம்பரிய முறைப்படி அழைக்கக் கூடாது என்றும் மனுதாரர் கோருவதை ஏற்க முடியாது.
நீதிபதிகளை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. அது வழக்கறிஞர் விருப்பம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.