பிரச்சாரத்தில் தரக்குறைவாக பேசினால் கட்சி அங்கீகாரம் ரத்து: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தேர்தல் பிரசாரங்களில் தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சட்ட ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 9 கட்டங்களாக நடக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் பெஞ்ச், தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், இதற்கான வழிமுறைகளை உடனடியாக எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.