காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்க்கும் கர்நாடகா.. விசாரணையை ஆரம்பித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு, மூன்று மாத இடைவெளிக்கு பிறகு இன்று முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவ ராய் மற்றும் ஏஎம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வழங்கிய தீர்ப்பில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று திட்டவட்டமாக தெதரிவித்தனர். மேலும், கர்நாடக அரசு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கும்படியும் உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர் மீண்டும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், காவிரி தொடர்பான விசாரணையை கடந்த மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அதுவரை தொடர்ந்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் பேரில் 2 ஆயிரம் கன அடி அளவு தண்ணீரை தமிழகத்திற்கு தொடர்ந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி காவிரி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நீதிமன்ற கோடைக்கால விடுமுறையை அடுத்து ஜூலை 11ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதில் ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக கால அவகாசம் அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று முதல் மீண்டும் காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளது.