ஆ.ராசாவின் டெல்லி வங்கி லாக்கரை திறந்து சி.பி.ஐ. சோதனை: ரொக்கம், ஏராளமான ஆவணங்கள் சிக்கின!!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசாவின் டெல்லி வங்கி பெட்டகத்தை நேற்று திறந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, கலைஞர் டிவிக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை ஆகிய ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1999-2010ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ27.9 கோடி சொத்து குவித்தார் ஆ. ராசா என சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

17 பேர் மீது வழக்கு
இந்த வழக்கில் அவரது மனைவி பரமேஸ்வரி உட்பட 17 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராகிவிடுவார் என கூறப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டவரும் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பருமான சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பாணுவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

6 கிலோ தங்கம்
இதனைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, பெரம்பலூர் உட்பட 20 இடங்களில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 6 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் என பலவற்றை சி.பி.ஐ. அள்ளிச் சென்றது.

சிக்கியது லாக்கர் சாவி
மேலும் ஆ. ராசாவின் டெல்லி வீட்டில் சோதனை நடத்திய போது, அவரது வங்கி பெட்டகத்தின் (லாக்கர்) சாவியை சி.பி.ஐ. கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அந்த சாவி மூலம் டெல்லியில் ஆ.ராசா சேமிப்புக் கணக்குப் பராமரித்து வரும் பொதுத் துறை வங்கிக் கிளைக்கு சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் குழு நேற்று நண்பகலில் சென்றது.

ஏராளமான ஆவணங்கள்..
அங்கு ராசா, அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், பல்வேறு வீட்டுமனைப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிமன்றத்தில் அனுமதி...
முன்னதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று காலையில் ஆஜரானார். அப்போது சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
எனது வங்கி பெட்டகத்தை சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக செல்ல அனுமதிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சோதனை நடந்த இடங்களிலேயே இப்போது மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடத்துகிறது என்று முறையிட்டார்.

சென்னை டீம் விசாரணை
அப்போது சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குறுக்கிட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புப் பிரிவின் சென்னை மண்டலம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில் நாங்கள் தலையிட முடியாது என்றார்.
இதைத் தொடர்ந்து வங்கிப் பெட்டகத்தை சி.பி.ஐ. சோதனையிடும் போது ஆ.ராசா உடனிருக்க வேண்டும் என்பதால் அதிகாரிகளுடன் அவர் செல்ல சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்தார். பின்னர் அமலாக்கத் துறை வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 8-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications