போலி பாஸ்போர்ட் வழக்கு: 10 நாட்கள் சிபிஐ காவலில் சோட்டா ராஜன்
டெல்லி: போலி பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்போலிடம் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சோட்டா ராஜன் சிறப்பு விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ராஜனை தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சோட்டா ராஜனின் பாஸ்போர்ட்டில் மோகன் குமார், மாண்டியா, கர்நாடகா என்று உள்ளது. இது குறித்து மாண்டியா போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜனின் பாஸ்போர்ட்டில் இருக்கும் முகவரியில் மோகன் குமார் என யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ராஜன் மோகன் குமார் பெயரில் போலி பாஸ்போர்ட்டை 1988 முதல் 1998ம் ஆண்டு காலத்தில் பெற்றிருக்கலாம். மேலும் அதை அவர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 2 முறை புதுப்பித்திருக்கிறார் என்று மாண்டியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோட்டா ராஜன் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.