பாஜக ஆட்சியில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு.. புதுப் பொலிவுடன் தீவிரமடைகிறது!
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியில் ஆட்சி மாறியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக்கியுள்ளது. இந்த வழக்கில் அடுத்து மத்திய நிதியமைச்சக அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
முதலாவது ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார் தயாநிதி மாறன். அப்போது, சில தொலைத்தொடர்பு வட்டங்களில் புதிதாகச் சேவைகளைத் தொடங்க அனுமதி கேட்டு ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.
அதேசமயம், ஏர்செல் நிறுவனத்தை மலேசியத் தொழிலதிபர் அனந்தகிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு ஏர் செல் அதிபர் சிவசங்கரை தயாநிதி மாறன் தரப்பு நெருக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நெருக்குதலைத் தொடர்ந்து ஏர் செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திடம் கை மாறியது. அதன் பின்னர் மின்னல் வேகத்தில் ஏர் செல் கேட்ட சேவை அனுமதி கிடைத்தது.
இந்த நிலையில், சிவசங்கரன், டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளைச் சந்தித்து தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டி.வி. உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராகப் புகார் அளித்தார். அதில், என்னை நிர்ப்பந்தப்படுத்தி ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் விற்கச் செய்தார். ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதை அடுத்து, புதிய தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவைகள் தொடங்க ஏர்செல்லுக்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி தயாநிதி மாறன் அனுமதி வழங்கச் செய்தார்.
இதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் அங்கமான சன் டி.டி.எச்.சில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2011ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவானது. அதன் பின்னர் விசாரணை தொடங்கியது.
இருப்பினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விசாரணை மந்தமாகவே இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விசாரணை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, குற்றச் சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. இந்த வாரம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளது.
இந்தப் பின்னணியில், ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கிய வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரிய (எஃப்.ஐ.பி.பி.) உறுப்பினர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் சிலரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.