டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்! ஆம் ஆத்மி அதிர்ச்சி
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குவிந்தனர். ஆனால் ரெய்டு நடக்கவில்லை என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
'டாக் டூ ஏ.கே.' என்ற பிரசார திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிசோடியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது சிபிஐ. கடந்த ஜனவரி மாதம், "டாக் டூ ஏ.கே." என்ற பிரசார நிகழ்ச்சிக்கு ஆம் ஆத்மி அரசு ஏற்பாடு செய்தது.

இந்த சமூக ஊடக பிரச்சாரத்தில் முறைகேடுகள் நடந்ததாக சிசோடியா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு ஆரம்பகட்ட விசாரணையை நடத்தியது சிபிஐ.
டெல்லி அரசாங்கத்தின் கண்காணிப்புத் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட புகாரை அடிப்படையாகக் கொண்டு சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பொதுமக்களை உரையாட செய்வது அந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக டெல்லியை சேர்ந்த பிரபல மக்கள் தொடர்பு அமைப்புடன் சிசோடியா ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அரசின் முதன்மை செயலாளரின் ஆட்சேபனைகள் இருந்த போதிலும் அரசாங்கம் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்துவிட்டதாக குற்றம்சாட்டிய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மனிஷ் சிசோடியா வீட்டில் குவிந்தனர். எனவே அங்கு ரெய்டு நடத்தி வருகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை சிபிஐ மறுத்துள்ளது. விசாரணை மட்டுமே நடப்பதாக சிபிஐ கூறுகிறது. ஆயினும் மனிஷ் சிசோடியா வீட்டை சுற்றிலும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications