தீபாவளி போனஸுக்கான உச்சவரம்பு அப்படியே "டபுள்" ஆகிறது.. மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் தொகைக்கான உச்சவரம்பை இரு மடங்காக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகையை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக இரு மடங்காக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது..
மேலும், தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; இனி, 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு போனஸ் கிடைக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1965 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போனஸ் சட்டத்தின்படி 20 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மற்றும் போனஸ் தொகை, கடைசியாக, 2006ல், உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், போனஸ் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன. செப்டம்பர் 2 ல், நாடுமுழுவதும் தொழிற்சங்கங்கள், ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அப்போது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்திய மத்திய அரசு, போனஸ் தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. அதன்படி, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது போனஸ் திருத்த மசோத நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.