டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு விடுதலை
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி: ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 25 நாட்களாக அறவழியில் போராடி வருகின்றனர் தமிழக விவசாயிகள். தமிழக அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக, திமுக எம்.பிக்கள், தமிழக அமைச்சர்கள் பலரும் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினர். டெல்லியில் ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களையும் விவசாயிகள் சந்தித்து பேசினர்.

நூதனப் போராட்டங்கள்
ஆனால் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அறிவித்தனர் விவசாயிகள். ஒரு பக்கம் மீசை மழித்தல், மொட்டை அடித்தல், உருண்டு புரளுதல், தலைகீழாக நிற்பது என பல நூதனப் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் போராட்டத்தின் 25-வது நாளான இன்று டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அப்போது தமிழக விவசாயிகள் மீது கொடூரமான தடியடியை டெல்லி போலீசார் நடத்தினர்.

மத்திய அரசு சதி
டெல்லி போலீசார் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தமிழக விவசாயிகள் போராடுவதால் இந்த கொடூர வன்முறையை டெல்லி போலீஸ் மூலம் ஏவிவிட்டது மத்திய அரசு.

அய்யாக்கண்ணு கைது
பின்னர் அனைவரையும் கைது செய்து போராட்ட களமான ஜந்தர் மந்தரில் இறக்கிவிட்டது. ஆனால் போராட்டக் குழு தலைவர் அய்யாகண்ணுவை மட்டும் மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
|
மாலை விடுதலை
இதையடுத்து அய்யாக்கண்ணுவை விடுவிக்க கோரி ஜந்தர் மந்தரில் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இதையடுத்து மாலையில் விவசாயி அய்யாக்கண்ணுவை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு அய்யாக்கண்ணு மீண்டும் திரும்பியுள்ளார்.
கொந்தளிப்பு
தற்போது மத்திய அரசு நேரடியாக விவசாயிகளைத் தாக்கியும் கைது செய்தும் வருகிறது. இப்படி தமிழக விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications