ரோஹித் தற்கொலைக்கு நீதி கோரி போராடும் மாணவர்களுக்கு 'சல்யூட்'.... பிரகாஷ் அம்பேத்கர்
ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி கோரி போராடும் மாணவர்களை இந்திய அரசியல் சாசன சிற்பியும் தலித் விடுதலைக்கான முன்னோடியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நேரில் சந்தித்து பேசினார். ரோஹித்துக்கு நீதி கோரி போராடும் மாணவர்களுக்கு பிரகாஷ் அம்பேத்கர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதால் ரோஹித் வெமுலா பல்கலைக் கழக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ரோஹித், திடீரென தற்கொலை செய்து கொண்டார். ரோஹித்தின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சலோ ஹைதராபாத் பல்கலை.
இதனிடையே ரோஹித்தின் தற்கொலைக்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரோஹித்துக்கு நீதி கோரி சலோ ஹைதராபாத் பல்கலைக் கழகம் என்ற இயக்கம் இன்று தொடங்கப்படுகிறது.
மாணவர்கள் உண்ணாவிரதம்
இந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹைதராபாத், டெல்லி உட்பட நாடு முழுவதும் பல பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
|
பிரகாஷ் அம்பேத்கர்
இதனிடையே ஹைதராபாத்தில் போராடி வரும் மாணவர்களை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, ரோஹித்துக்காக நீதி கோரி போராடும் மாணவர்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மீனா கந்தசாமி
மேலும் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோஹித்துக்கு நீதி கோரி நடைபெற உள்ள நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், மூத்த பத்திரிகையாளர் சாய்நாத், எழுத்தாளர் மீனா கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
புதிய சர்ச்சை
இந்நிலையில் ரோஹித் வெமுலாவின் தாயார் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவ், திடீரென விடுப்பில் சென்றுள்ளார். தற்போது மூத்த பேராசிரியரான விபின் ஸ்ரீவத்சவா அப்பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைவேந்தராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.