நாகாலாந்து தனிநாடு கோரும் ஆயுத குழுவின் தலைவரை வளைத்துப் போட்ட சீனா- உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
கோஹிமா: நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதில் சீனா படுமும்முரமாக இருப்பதாக உளவுத்துறை அளித்து தகவல் மத்திய அரசை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
அகன்ற நாகாலாந்து அல்லது நாகாலிம் என்பதுதான் நாகா ஆயுத குழுக்களின் கோரிக்கை. இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் உள்ள நாகா இன மக்களின் வாழ்விடங்கள் மற்றும் மியான்மரில் உள்ள நாகா மக்களின் வாழ்விடங்களை ஒன்றிணைந்த ஒரு தனிநாடுதான் நாகாலிம்.
ஆயுதப் போராட்டம்
இந்த அகன்ற நாகலாந்து தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாகா ஆயுத குழுக்கள் போராடிப் பார்த்தன. ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
ராணுவம் மீது தாக்குதல்
இத்தகைய அமைப்புகளில் என்.எஸ்.சி.என்(கே) கப்லாங் தலைமையிலான பிரிவு மட்டும் 2015-ல் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக முறித்துக் கொண்டு மீண்டும் ஆயுத வழிக்குத் திரும்பியது. சீனா, மியான்மர் எல்லைப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டு இதர வடகிழக்கு ஆயுத குழுக்களுடன் இணைந்து இந்திய ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது கப்லாங் பிரிவு.
புதிய தலைவர்
கடந்த ஜூன் மாதம் கப்லாங்க் காலமானார். அவரைத் தொடர்ந்து லெப் ஜெனரல் கங்கோ கோனாக், என்.எஸ்.சி.என்.(கே) பிரிவு தலைவராகி இருப்பதாக கூறப்படுகிறது. கோனாக்கை தொடர்பு கொண்டு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது.
சீனாவுடன் பேச்சுவார்த்தை
ஆனால் கோனாக்கை அழைத்து சீனா கடந்த சில மாதங்களாக அதன் தெற்கு மாகாணப் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. நாகா இனமக்கள் கோனாக், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால் சீனாவோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது என கெடுபிடி காட்டி வருகிறது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.