ஆப்பிரிக்காவிலிருந்து நமக்கு குறி வைக்குதாம் சீனா.. டிஜிபோதியில் முதல் ராணுவ தளம்!
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான டிஜிபோதியில் சீனா ராணுவ தளம் அமைத்துள்ளது.
டெல்லி: எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான டிஜிபோதியில் ராணுவ தளத்தை சீனா அமைத்துள்ளது. வெளிநாட்டில் சீனா அமைத்துள்ள முதலாவது ராணுவ தளம் என்பதால் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லையில் போர் மூளும் நிலைமை உள்ளது. சீன அரசு ஊடகங்களோ, 1962-ம் ஆண்டு யுத்தத்தை இந்தியா மறந்துவிட்டதா? என ஏகடியம் பேசுகின்றன.
சீனாவுக்கு எச்சரிக்கை
இதனிடையே சென்னையில் அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது சீனாவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
டிஜிபோதி ராணுவ தளம்
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான டிஜிபோதியில் சீனா தமது ராணுவ தளத்தை அமைக்கிறது. வெளிநாடு ஒன்றில் சீனா அமைக்கும் முதலாவது ராணுவ தளம் இது.
இந்தியாவுக்கு இலக்கு
செங்கடலின் முனையில் ஏடன் வளைகுடாவில் டிஜிபோதி நாடு உள்ளது. இங்கிருந்து இந்தியாவை இலக்கு வைப்பதும் போர் மூண்டால் அரபிக் கடலுக்கு தமது படைகளை விரைவாக அனுப்புவதும் சீனாவுக்கு எளிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பதிலடி தருதாம்
ஏற்கனவே இந்துமா கடற்பரப்பில் சீனாவின் நடமாட்டம் தொடர்பாக இந்தியா எச்சரித்து வருகிறது. அத்துடன் தென்சீனா கடற்பரப்பில் வியட்நாமுடன் கை கோர்த்துக் கொண்டு இந்தியா செயற்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி தருவதாக நினைத்துக் கொண்டு அரபிக் கடலை தொட்டுவிடும் தொலைவில் இருக்கும் டிஜிபோதியில் சீனா ராணுவ தளம் அமைக்கிறது.