ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு, கரப்பான் பூச்சி!
நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரயில்களில் பயணிகளுக்கு விற்கப்படும் உணவுகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஒருபுறம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழுவும், கரப்பான் பூச்சியும் இருந்தது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே ரயில்களில் உணவு சமைத்து விற்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட இரண்டு பயணிகளுக்கு வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனைக் கண்ட சக பயணிகள், அந்த ரயில் முகல்ஸராய் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஒருமணிநேரம் பயணிகள் ரயிலை இயக்க அனுமதிக்கவில்லை. பின்னர் சுகாதாரமற்ற உணவு பற்றி புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி கேண்டீன் உரிமையாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனிடையே ரயிலில் கெட்டுபோன அல்லது தரம் குறைந்த உணவை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி கேண்டீன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 5,000 லிருந்து 1 லட்சமாக ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது. மேலும் சுகாதாரமற்ற உணவினை சப்ளை செய்தவர்கள் மேற்கொண்டு ரயிலில் உணவு விற்க தடை விதிக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறது.
இந்தியன் ரயில்வே வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.