கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவின் கோட்டை 'பெல்லாரி'யை கைப்பற்றியது காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் கோட்டையான பெல்லாரி சட்டசபை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எதியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வென்று எம்.பி.க்கள் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனால் கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ்- பாஜக போட்டி
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இத் தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடாமல் புறக்கணித்ததது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.
பாஜக கோட்டை
சிகாரிபுரா, பெல்லாரி புறநகர் தொகுதிகள் பாரதிய ஜனதா வசம் இருந்தன. பாரதிய ஜனதாவின் கோட்டையாக விளங்கிய 2 தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ள மீண்டும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் அக்கட்சி இருந்தது.
பெல்லாரி
இந்நிலையில் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால கிருஷ்ணன் 33,144 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிகாரிபுரா
சிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலையில் உள்ளார்.
சிக்கோடி
சிக்கோடி தொகுதி காங்கிரஸ் வசம் இருப்பதால், அங்கு எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.