30 வருட பஞ்சாயத்து! மாறி மாறி ஆட்சியமைத்த பாஜக - காங்கிரஸ்! இமாச்சலை 2வது முறையாக வெல்லுமா பாஜக!
சிம்லா : இமாச்சல சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜக 30 முதல் 40 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கு காங்கிரஸ் பாஜக நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை வரும் என கூறப்படுகிறது.
இமாச்சல சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 12ஆம் தேதி நடைபெற்றது 62 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களமிறங்கினர். 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றிபெறும் கட்சியை இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என் என்பது குறிப்பிடத்தக்கது.
12ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவின்போது 75.6% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கை கொடுக்காத ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் தோற்கிறது காங்கிரஸ்? கார்கேவிற்கும் பின்னடைவு
நியூஸ் 18 கணிப்பு
இந்நிலையில் குஜராத் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்கு பதிவு இன்று மாலை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பாஜக குறைந்தபட்சம் 32 முதல் 40 இடங்களிலும் காங்கிரஸ் 25 முதல் 34 இடங்களிலும் வெற்றி பெறும் என நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆட்சி அமைக்க பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மற்ற கணிப்புகள்
பி-மார்க் கருத்துப்படி, பாஜக 34-39 இடங்களிலும், காங்கிரஸ் 28-33 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 0-1 இடங்களிலும், மற்றவை 1-4 இடங்களிலும் வெற்றி பெறலாம். இடிஜியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு 38 இடங்களும், காங்கிரஸுக்கு 28 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 0 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ஜன் கி பாத் கணிப்பின் படி பாஜக 32-40 இடங்களையும், காங்கிரஸுக்கு 27-34 இடங்களையும், ஆம் ஆத்மி 0 இடங்களையும் மற்றவர்களுக்கு 1 இடங்களையும் கைப்பற்றலாம். ஆக்சிஸ் மை இந்தியா பாஜகவுக்கு 24-34 இடங்களும், காங்கிரஸுக்கு 30-40 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 0 இடங்களும் மற்றவர்களுக்கு 4-8 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
பாஜகவே முன்னிலை
நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு 32-40 இடங்களும், காங்கிரஸுக்கு 27-34 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 0 இடங்களும் மற்றவர்களுக்கு 1-2 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. BARC கருத்துப்படி, பாஜக 35-40 இடங்களிலும், காங்கிரஸ் 20-25 இடங்களிலும், ஆம் ஆத்மி 0-3 இடங்களிலும், மற்றவர்கள் 1-5 இடங்களிலும் வெற்றிபெறலாம். பாஜகவுக்கு 35-40 இடங்களும், காங்கிரஸுக்கு 26-31 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 0 இடங்களும், மற்றவர்களுக்கு 0-3 இடங்களும் கிடைக்கும் என மேட்ரைஸ் கணித்துள்ளது.
பாஜக - காங்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 68 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 58 இடங்களையும் பாஜக ஏழு இடங்களையும் வென்றது. அப்போது இமாச்சலப் பிரதேச முதல்வராக வீரபத்திர சிங் பதவியேற்றார். அதன்பின் நடைபெற்ற தேர்தலில் 1990 ஆம் ஆண்டு 46 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவின் சாந்தகுமார் முதல்வராக பதவியேற்றார் .அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிக்கல்
தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போதும் வீரபத்ர சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் சிக்கலாக அமைந்தது. காங்கிரஸ் பாஜக என இரு கட்சிகளுமே 31 இடங்களை பெற்றது இதையடுத்து ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்த போது பிரேம்குமார் துமால் முதல்வராக பதவி ஏற்றார்.
அடுத்தடுத்து மாற்றம்
2003 தேர்தலில் காங்கிரஸ் 43 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வீரபத்ர சிங் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதை அடுத்து 2007 சட்டமன்ற தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 2012ல் 36 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸும் 2017 தேர்தலில் பாஜக 44 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை அடுத்தடுத்து பிடித்தன.
யாருக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தான் மாறி மாறி அமைந்த அரசாங்கத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில் பெண் வாக்காளர்கள் ஆதரவோடும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தோடும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை ஓரளவு இருந்தாலும் தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.