பிரதமர் பதவி... திடீரென பல்டியடித்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்!
பிரதமர் பதவிக்கு உரிமை கோருவது குறித்த கருத்திலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நம்பி ஆசாத் திடீரென பல்டியடித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், அதற்கான திட்டங்களையும் வகுத்து வருகின்றன.

குறிப்பாக, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் பெரும்பாலான மாநில கட்சிகள் ஒத்த குரலில் தங்களது கருத்தை எதிரொலித்து வருகின்றன. இந்த நிலையில், சிம்லாவில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத்," பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக உள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும் கட்சியாக இருந்தாலும் கூட, மாநில கட்சிகளை சேர்ந்த யாராவது ஒருவர் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால், அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது," என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது அணி அல்லது அதிக இடங்களை பெறும் மாநில கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் வாய்ப்பு கிடைப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்யும் என்ற ரீதியிலான ஆசாத்தின் கருத்தால் அரசியல் களம் விறுவிறுப்படைந்தது.
இந்த நிலையில், இன்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத் 24 மணிநேரத்திற்குள் பிரதமர் பதவி உரிமை கோரும் விஷயத்தில் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது," காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு உரிமை கோராது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அது உண்மையும் இல்லை. நாட்டின் மிக பழமையான பெரிய கட்சி காங்கிரஸ்.
மத்தியில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி செய்யும் வாய்ப்பை தரக்கூடிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. எனவே, மிகப்பெரிய கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இன்னும் தேர்தல் முடிவுகளே வெளிவராத நிலையில், இதுபற்றி இப்போது பேச வேண்டியதில்லை. பிரதமர் பதவி கூட்டணி கட்சிகளின் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.
லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும். இந்த தேர்தலில் 273 இடங்கள் வரை காங்கிரஸ் வெல்லும். கடந்த காலங்களில் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறோம். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை வழங்கும்.
பிரதமராவதற்கு ராகுலுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. பாஜகவுக்கு மாற்றாக நிலையான அரசு வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சிதான் சிறந்த தேர்வாக இருக்கும்," என்று பேசினார்.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று நேற்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications