சுகோய்-30 போர் விமான விபத்து.. விமானிகள் இருவர் பலியானதாக அறிவிப்பு
சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சுகோய் 30 போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் பலியானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1997ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது சுகோய். பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக இதை சேர்த்தனர். ஆனால் சேர்த்தது முதலே அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது.
அடிக்கடி தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி வருவது அதன் அடையாளமாக மாறிப் போய் விட்டது. கடந்த 23ந் தேதி அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது சுகோய் ரக போர் விமானம்.
அந்த விமானத்தை ஸ்க்ரூட்ரான் தலைவர் டி. பங்காஜ் மற்றும் விமான லெப்டினண்ட் எஸ்.அச்சுதேவ் ஆகிய விமானிகள் இயக்கினர். விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் திடீரென்று ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலம் காமெங் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 26-ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த விமானிகள் கதி என்ன என்றும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.