தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி விஸ்வரூபம் எடுத்துள்ள சைபர் கலிபேட்
டெல்லி: சைபர் கலிபேட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள். அவர்களிடம் ஆயுதம் இல்லை. ஆனால் அவர்கள் தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்துள்ள ஆபத்தானவர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆசியுடன் செயல்பட்டு வரும் ஆன்லைன் தீவிரவாத அமைப்பு தான் இந்த சைபர் கலிபேட்.
அவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன இணையதளத்தை ஹேக் செய்து அதில் பல்லி தம்மடிக்கும் புகைப்படத்தை போட்டு 404 விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சைபர் கலிபேட் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு உலக அளவில் செயல்பட்டு வருகிறது.
சைபர் கலிபேட்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தன்னைத் தானே கலிபா என்று அறிவித்தார். அதன் பிறகே இந்த ஆன்லைன் தீவிரவாத அமைப்பான சைபர் கலிபேட் உருவானது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே கொள்கைகளை பரப்புவது தான். 2014ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தான் சைபர் கலிபேட் உருவெடுத்து பலருக்கும் ஆன்லைன் மூலம் தகவல் அனுப்பியது. இந்த அமைப்பில் தற்போது உலக அளவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
சாப்ட்வேர்
சைபர் கலிபேட் அமைப்பினர் அவர்களுக்கு என்று தனியாக ஒரு என்க்ரிப்ஷன் சாப்ட்வேர் வைத்துள்ளனர். அதனால் அவர்களின் நெட்வொர்க்கை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சைபர் கலிபேட் தனது திட்டங்கள் குறித்து அறிவித்தது. அதன் பிறகு சில மாதங்களில் வலுவான அமைப்பாக அது உருவெடுத்துவிட்டது. இந்த அமைப்புக்கு தலைவராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஹுசைன் ஜுனைத் உள்ளார். அவர் தற்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுநரான அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டு சைபர் கலிபேட் அமைப்பை வளர்க்க சிரியா சென்றார்.
சைபர் கலிபேட் தலைவர்
சைபர் கலிபேட் அமைப்பின் தலைவர் ஜுனைத் வெறும் 20 வயதானவர் தான். அவருக்கு உயிர்மூச்சு தொழில்நுட்பம். சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பம் தான் அவருக்கு பிடித்த விஷயம். 2012ம் ஆண்டு அவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் இணையதளத்தை ஹேக் செய்து சிறைக்கு சென்றார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அமெரிக்காவில் உள்ள அனைத்து முக்கிய இணையதளங்கள் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களை ஹேக் செய்வதே அவரின் திட்டம்.
தற்போது சைபர் கலிபேட் ஆட்கள் கொள்கையை பரப்புவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் முன்னோட்டம் தான் மலேசியன் ஏர்லைன்ஸ் இணையதளத்தை ஹேக் செய்தது என்று கூறப்படுகிறது. அவர்கள் எதிர்காலத்தில் பல பெரிய தாக்குதல்களை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் இந்த அமைப்பு பல்வேறு இணையதளங்களில் பல குரூப்களை அமைத்துள்ளது. ஒருவருடன் ஒருவர் பேச, ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான தகவல்களை வெளியிட இந்த குரூப்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இணையதளங்களால் இந்தியாவுக்கும் பிரச்சனையாக ஆகியுள்ளது. அவர்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேருமாறு கவர்கிறார்கள்.