செவ்வாய்க்குப் போகும் வழியில் "ஆன் தி வே"யில் மங்கள்யான் எடுத்த படம் இது!
டெல்லி: செவ்வாய் கிரக பயணத்தில் மங்கள்யான் இருந்தபோது கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில், அதாவது பூமியிலிருந்து புறப்பட்டு சில நாட்கள் ஆகியிருந்த நிலையில், தெற்கு ஆந்திர மாநிலத்தை சுழற்றியடித்த ஹெலன் புயலை படம் எடுத்து அனுப்பியிருந்தது மங்கள்யான்.
இதுதான் மங்கள்யான் எடுத்து அனுப்பிய முதல் புகைப்படமாகும். நவம்பர் 19ம் தேதி இந்தப் படத்தை மங்கள்யான் எடுத்திருந்தது. நவம்பர் 5ம் தேதி அது விண்ணில் செலுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
வங்கக் கடலில் கிழக்கு ஆந்திரப் பிரதேச கரையோரமாக உருவாகியிருந்த ஹெலன் புயலை அது படம் பிடித்து அனுப்பியிருந்து. நவம்பர் 19ம் தேதி பிற்பகலில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அப்போது மங்கள்யான், இந்தியாவுக்கு மேலே 68,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தது.
மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மார்ஸ் கலர் கேமராவானது 1.5 கிலோ எடை கொண்டதாகும். 20 மீட்டர் ரெசலூஷனில் இது படங்களைப் பிடிக்கும். கேமரா எப்படி செயல்படுகிறது என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக ஹெலன் புயலை படம் பிடித்து சோதித்தனர் விஞ்ஞானிகள். படம் மிகத் தெளிவாக வந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு திருப்தி அடைந்தனர்.