ஒரு வாரமா ஓயாம அடிக்கும் 'ஓகி'... இன்று நள்ளிரவு சூரத்தில் கரையை கடக்கிறது!
ஒரு வாரமாகியும் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும் ஓகி புயலானது இன்று நள்ளிரவு சூரத் அருகே கரையை கடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

காந்திநகர் : தமிழகம், கேரளாவை புரட்டிப் போட்ட ஓகி புயல் ஒரு வாரமாகியும் ஓயாமல் குஜராத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று நள்ளிரவு சூரத் அருகே ஓகி புயலானது கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஓகி புயலாக மாறி கடந்த 30-ம் தேதி குமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளை கபளீகரம் செய்த ஓகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பாதையை லட்சத்தீவை நோக்கி நகர்த்தியது.
லட்சத்தீவில் புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கும் டிமிக்கி கொடுத்து விட்டு அடுத்ததாக தனது ரூட்டை மஹாராஷ்டிரா, குஜராத்தை நோக்கி விட்டுள்ளது ஓகி. ஓகி புயல் காரணமாக அங்கு கனமழை பெய்தது, குமரி, கேரள பாதிப்புகளை பார்த்து மஹாராஷ்டிரா அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் களமிறங்கிறது. இன்று அத்ந மாநிலத்தில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சூரத் அருகே கரையை கடக்கிறதா?
தன்னுடைய பயணத்தில் ஓகி தற்போது குஜராத் அருகே சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. ஓகியால் கடும் மழை மற்றும் சூரத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஓகி புயல் கரையை கடக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மீனவர்கள் கரை திரும்பினர்
இதனால் முன்எச்சரிக்கையாக நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 13 ஆயிரம் மீனவர்களை கரை திரும்ப கடற்படை உத்தரவிட்டதையடுத்து அவர்கள் நேற்றே கரை திரும்பிவிட்டனர். எனினும் துவாரகாவைச் சேர்ந்த 700 படகுகள் மற்றும் ஏனைய 300 படகுகள் கடலில் இருப்பதாக தெரிகிறது. அவர்களின் இருப்பிடத்தை கண்டு மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாக, குஜராத்வருவாய்த்துறை முதன்மை செயலாளர் பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார்.

390 கி.மீ தொலைவில்
ஓகி புயல் நள்ளிரவில் கரையை கடப்பதால் மோசமான சூழலைக் கூட எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஓகி தற்போது சூரத்திற்கு 390 கிமீட்டர் தொலைவில் இருக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது சூரத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதொடர்பு துண்டிக்காமல் இருக்க
5 தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் ஒரு மாநில பேரிடர் மீட்புக் குழு சூரத் மற்றும் இதர கடற்பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 510 கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் தொலைதொடர்பு வசதி துண்டிக்கப்படாமல் இருக்க சிறிய டவர்களை செல்லுலார் நிறுவனங்கள் நிறுவி வருகின்றன. ஓகி புயல் கரையைக் கடந்த பின்னர் கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை எழ வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications