உத்தரகாண்ட் பேரழிவு : சட்டி காடுகளில் சிதைந்த சடலங்களால் சர்ச்சையில் சிக்கியது மாநில அரசு
டேராடூன் :உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த மிகப் பெரிய இயற்கை பேரழிவில் சிக்கி பலியான எண்ணற்றவர்களின் சடலங்கள் மற்றும் எலும்புக் கூடுகள், தற்போது அம்மாநிலத்தின் சட்டி வனப் பகுதியில் கிடைத்துள்ளன. இதன்மூலம், பேரழிவு மீட்புப்பணியில் உத்தரகாண்ட் அரசு மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக இச்சடலங்களைக் கண்டறிந்த நியூஸ் நேசனல் என்ற செய்தி சேனல் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இது தொடர்பாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரகாண்டில் பெய்த கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் உண்டானது. இந்தப் பேரழிவில் கேதர்நாத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சிக்கிக் கொண்டனர்.
5700 பேர் பலி...
பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களையும், மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை 16ம் தேதியன்று சுமார் 5700 பேர் இந்தப் பேரழிவில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது. அவர்களில் 934 பேர் உள்ளூர்க்காரர்கள் எனக் கூறப்பட்டது.
மீட்புப்பணி...
இந்தப் பேரழிவின் காரணமாக பாலங்கள் மற்றும் சாலைகள் உருக்குலைந்ததால் சுமார் ஒரு லட்சம் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இறுதிச் சடங்குகள்...
இதன்மூலம், சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், இறந்தவர்களின் சடலங்கள் அனைத்திற்கும் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ததாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சிதைந்த சடலங்கள்...
ஆனால் தற்போது சட்டி காட்டுப் பகுதிகளில் பல சிதைந்த உடல்கள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கண்டறியப்பட்டுள்ள சடலங்களுக்கு அருகே உடைமைகளும் சிதைந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளது. இதன் மூலம், உதவிக்காக காத்திருந்த மக்கள் பலர் உதவி கிடைக்காமலேயே பலியாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
தஞ்சம்...
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அங்கிருந்த காடுகளில் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் மீட்புப் படையினர் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்காததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
சர்ச்சை....
செய்தி நிறுவனம் ஒன்றால் அந்த இடத்தை சுலபமாக அடைய முடிகிறதென்றால், மீட்புப் படையினரால் ஏன் முடியவில்லை என கேள்வி எழுந்துள்ளது. மேலும், உடல்கள் முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டதாக உத்தரகாண்ட் அரசு சொன்னது பொய் என்ற சர்ச்சையும் உண்டாகியுள்ளது.