தற்கொலை செய்த ராம் கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு
தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டெல்லி: ஒரே பதவி, ஓரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போரட்டத்தின் போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவாலை தியாகியாக அறிவிக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் (வயது 70) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களின் நலன்களுக்காகவே இந்த முடிவை எடுத்தாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட ராம்கிஷனுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரை தியாகியாக அறிவிக்கப் போவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், ராம்கிஷனை தியாகியாக அறிவிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.