வந்துவிட்டது சட்டம்: டாக்டர்கள் இனி மருந்துச்சீட்டில் கிறுக்க முடியாது
டெல்லி: மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் மருந்துகளின் பொதுப் பெயரை தெளிவாக பெரிய எழுத்தில் எழுதும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் எழுதும் மருந்துகளின் பெயர்கள் ஒன்றுமே புரியாத வகையில் உள்ளது. மருத்துவர்கள் எழுதுவது புரியாத காரணத்தால் தவறான மருந்துகள் அளிக்கப்பட்டு நோயாளிகள் மரணம் அடைந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. இதை மாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறுகையில்,
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் 2002ல் திருத்தம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இதனால் இனி மருத்தவர்கள் மருந்துகளின் பொதுப் பெயரை பெரிய எழுத்தில்(capital letters) தெள்ளத் தெளிவாக எழுத வேண்டும் என்றார்.
மருந்துகளுக்கு பொதுப் பெயர், பிராண்ட் பெயர் என இரண்டு உள்ளது. உதாரணமாக பாரசிட்டமால் என்பது பொது பெயர். அதையே பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவ்வாறு பாரசிட்டமாலை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கு கால்பால், பனடால் என்று விதவிதமான பிராண்ட் பெயரை வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications