ஃபோர்டு நிதி வாங்கிய டீஸ்டாவின் என்.ஜி.ஓ.' போன்களை ஒட்டுக் கேட்டது- குஜராத் அரசு 'திடுக்' தகவல்
டெல்லி: சர்வதேச என்.ஜி.ஓ.வான ஃபோர்டு பவுண்டேசன் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் மும்முரமாகி வருகின்றன... தற்போது குஜராத் கலவரங்களின் போது 5 லட்சம் மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பதற்கு சமூக ஆர்வலர் டீஸ்டா செல்வாவின் சபரங் அறக்கட்டளைக்கு ஃபோர்டு பவுண்டேசன் நிதி உதவி செய்தது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நமது நாட்டில் தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்கிற பணி உளவுத்துறைக்கு உண்டு. உள்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற்று காவல்துறையும் இடைமறித்துக் கேட்கலாம்.. என்கிறது மத்திய அரசுக்கும் பி.யூ.சி.எல். அமைப்புக்குமான வழக்கில் 1997-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
சிக்கலில் டீஸ்டா
மத்திய உள்துறை அமைச்சகம் ஃபோர்டு பவுண்டேசனின் பணப் பரிமாற்றத்தை முடக்கி வைத்திருக்கும் நிலையில் குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாவின் சபரங் அறக்கட்டளையின் செயல்பாடுகள் ஆராயப்பட்டு வருகிறது. டீஸ்டா நடத்தி வரும் சபரங் டிரஸ்ட் மற்றும் சபரங் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஆகியவை முறையாக 5.4 லட்சம் டாலர் மற்றும் 2.9 லட்சம் டாலர்களை நிதியாக பெற்றுள்ளது.
ஃபோர்டு பவுண்டேசன் நிதி
இந்த நிறுவனங்கள் தொடர்பாக குஜராத் மாநில அரசு விசாரணை நடத்திய நிலையில் சில உண்மைகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. சபரங் அறக்கட்டளைக்கு ஃபோர்டு பவுண்டேசன் நிதி உதவி செய்திருக்கிறது. இந்த நிதி உதவியை உரிய விளக்கங்கள் ஏதுமின்றி பல்வேறு நடவடிக்கைகளுக்கு சபரங் அறக்கட்டளை பயன்படுத்தி உள்ளது.
ஒட்டுக் கேட்பில் சபரங்
உதாரணமாக தொலைபேசிகளை இடைமறித்து ஆராய்வதற்காக ரூ5 லட்சம் செலவிடப்பட்டதாக சபரங் அறக்கட்டளையின் ஒரு கணக்கு சொல்கிறது.. ஆனால் 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது சுமார் 5 லட்சம் தொலைபேசி அழைப்புகளை சபரங் அறக்கட்டளை இடைமறித்து கேட்டிருக்கிறது. இது சட்டவிரோத நடவடிக்கை என்கிறது குஜராத் அரசு.
உள்துறை அமைச்சகம் தலையிடுதல்..
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஃபோர்டு பவுண்டேசனின் பணம் செல்லாமல் இருப்பது எப்படி? இந்திய என்.ஜி.ஓ.க்களுக்கு வெளிநாட்டு நிதி வரக் கூடிய நுழைவு வாயிலான உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு, "தொலைபேசிகளை இடைமறிப்பது என்.ஜி.ஓ.க்களின் வேலை அல்ல.. அதற்கு வெளிநாட்டு உதவி கொடுக்ககக் கூடாது" என கூற வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
அவ்வளவுமே ஆபீஸ் செலவு?
இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவெனில் டீஸ்டாவின் சபரங் அறக்கட்டளை மற்றும் சபரங் கம்யூனிகேஷன்ஸூக்கு கிடைத்த நிதியில் 80% மற்றும் 75% நிதி அலுவலக செலவுகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. சபரங் அறக்கட்டளை கணக்குகளின் படி ஒரு புராஜெக்ட்டுக்கு 2.5 லட்சம் டாலர் நிதி கிடைக்கிறது... இதில் 80% அலுவலக செலவினங்கள்தான்... இதேபோல்தான் சபரங் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு புராஜெக்ட்டுக்கு 2.9 லட்சம் டாலர் கிடைக்கிறது.. இதில் 75% அலுவலக செலவினங்கள்தானாம்.. அதே நேரத்தில் அப்படி என்ன அலுவலக செலவுகள் என்பது தெளிவாக இல்லை என்கிறது குஜராத் அரசு வட்டாரங்கள்.
ராணுவத்துக்கு எதிராக பிரசாரம்
ஃபோர்டு பவுண்டேசன் நிதி கொடுக்கும் சபரங் மற்றும் சபரங் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை இந்திய ராணுவம் குறித்து அவதூறு பரப்புகிறது என்கிறது குஜராத் அரசு.
பணியில் உள்ள ராணுவத்தினரும் ஓய்வு பெற்ற ராணுவத்தினரும் தீவிரவாதத்தை உருவாக்குவதாக சொல்கிறது சபரங் கம்யூனிகேஷன்ஸ் வெளியீடுகள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது குஜராத் அரசு. இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் இத்தகைய அவதூறுகளுக்குத்தான் ஃபோர்டு பவுண்டேசன் நிதி உதவி செய்கிறது. மதங்களிடையே பதற்றத்தை உருவாக்குகிற ஒரு அமைப்புக்குத்தான் ஃபோர்டு பவுண்டேசன் உதவுகிறதே தவிர வேறு எதுவுமே இல்லை என்கிறது குஜராத் அரசு. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து நமது நாட்டின் நிலவரங்களை மத அடிப்படையில் மிகைப்படுத்தி விவரிக்கவும் சபாரங் அறக்கட்டளை உதவியிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.