பெங்களூரில் ஏடிஎம் பணத்தை வேனுடன் அபேஸ் செய்த தமிழக டிரைவர்.. தனிப்படை தேடுதல் வேட்டை
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சென்ற பணத்தை திருடிவிட்டு தப்பிய வேன் டிரைவர் தமிழகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பெங்களூர் பிரேசர் டவுன் அருகே காக்ஸ் டவுனில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம், வங்கிகளிடம் பணத்தை பெற்று, ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இங்கு கே.ஆர்.புரம் அடுத்த லிங்கராஜபுரத்தை சேர்ந்த டுமினிக் செல்வராஜ் ராய் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப வேனில் உதவி மேலாளர் சிவக்குமார் புறப்பட்டுள்ளார். அவருடன் துப்பாக்கிகளுடன் 2 காவலாளிகளும் உடன் சென்றனர். அந்த வேனைதான் டுமினிக் செல்வராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.
மதியம் மத்திய பஸ் நிலையமான, மெஜஸ்டிக் அருகே கே.ஜி. ரோட்டில் உள்ள வங்கிக்கு அந்த வேன் சென்றபோது, சிவக்குமார் வங்கிக்குள்ளும், காவலாளிகள் கழிவறைக்கும் சென்றிருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ரூ.1.37 கோடி பணத்துடன் வேனை டிரைவர் டுமினிக் செல்வராஜ் கடத்தி சென்று விட்டார்.
வேனுடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வந்த நிலையில், வேன் நேற்று அதிகாலை பெங்களூர் வசந்த்நகர் அருகே உள்ள ஒரு கல்லூரி முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. வேனில் போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.45 லட்சம் மட்டுமே இருந்தது. மீதி பணம் ரூ.92 லட்சம் டிரைவர் டுமினிக் செல்வராஜால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
லிங்கராஜபுரத்தில் வசித்து வந்த வீட்டில் டுமினிக் இப்போது மனைவி மற்றும் மகனோடு மாயமாகிவிட்டார். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். உறவுக்காரர்கள் வீட்டில் எங்கோதான் பதுங்கியிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு விரைந்துள்ளனர்.
டுமினிக் செல்வராஜ், மனைவி துபாயில் வேலை செய்துவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெங்களூர் வந்தாராம். எனவே அவருக்கும் இதற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழகத்ததில் டுமினிக் செல்வராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவலை, போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.