பிகானிர் நில முறைகேடு: சோனியா மருமகன் வதேரா கம்பெனிக்கு நோட்டீஸ்
டெல்லி: ராஜஸ்தானின் பிகானிரில் நிலங்களை முறைகேடாக வாங்கிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைபைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம், பிகானிரில் பெருமளவிலான நிலத்தை முறைகேடாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. மாநில அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட சுமார் 1400 ஏக்கர் நிலம் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் 6 நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு தாரைவார்த்து தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இல்லாத நபர்களின் பெயர்களில் நிலங்களை வாங்குவது, போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரிப்பது, கருப்புப் பணத்தை பயன்படுத்தி நிலம் வாங்குவது என பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக தெரியவந்தது.
ராபர்ட் வதேராவுக்கு உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்கள், பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளின் வீடுகள், முன்னாள் அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் கடந்த மே மாதம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஆவணங்களைத் திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில் வங்கிக் கணக்குகள், வருமான வரி ஆவணங்கள், நிலப் பத்திரங்கள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நில ஊழலில் முக்கியமான நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெய்பிரகாஷ் பாகத்வாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு இன்று அமலாக்கத்துறை மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னும் இரண்டு வார காலத்திற்குள் உங்கள் நிறுவனம் தொடர்பான கணக்குகளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என இந்த புதிய சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.